
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில், சமிகா கருணரத்னேவிற்கு வழங்கப்பட்ட நாட் அவுட்டானது பேசுபொருளாக மாறியுள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் போராடி தோல்வியுற்ற இலங்கை அணி, 2ஆவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து 2-0 என தொடரை இழந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆலன் அரைசதம் அடித்து 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டேரியல் மிட்சல் 47 ரன்கள் மற்றும் க்லென் பிலிப்ஸ் 39 ரன்கள் எடுத்து இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த, லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த ரச்சின் ரவீந்திரா கடைசி நேரத்தில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி நீயூசிலாந்து அணியை 274 ரன்களுக்கு எடுத்து சென்றார். சிறப்பாக பந்துவீசிய கருணரத்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளரான ஹென்ரி ஷிப்லேவின் அற்புதமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்கள் முடிவில் 76 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் இன் ஃபார்ம் வீரரான குசால் மெண்டிஸ் மற்றும் கேப்டன் தசுன் ஷனகா ஆகிய இருவரையும் டக் அவுட்டில் வெளியேற்றிய ஹென்ரி ஷிப்லே முதல் முறையாக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பேட்ஸ்மேன் கிரீஸ்-க்கு வெளியே இருந்தும் நாட் அவுட் கொடுத்த அம்பயர்!
டிக்னர் வீசிய 18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட கருணரத்னே மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சித்தார். முதலாவது ரன்னை எடுத்துவிட்டு இரண்டாவது ரன்னிற்கு கருணரத்னே முயற்சிக்க, வேண்டாம் என அவரை திருப்பி அனுப்பினார் ஸ்டிரைக் எண்டில் இருந்த லஹிரு குமாரா. கருணரத்னே மீண்டும் பவுலர் எண்டிற்கு சென்று சேர்வதற்குள், பீல்டர் வீசிய த்ரோவை பிடித்து டிக்னர் ரன் அவுட் செய்துவிட்டார். டிக்னர் பந்தை பிடித்து ஸ்டம்பை அடிக்கும் போது டைவ் அடித்த கருணரத்னே கிரீஸிற்குள் சென்றுவிட்டார்.

இந்நிலையில் விக்கெட்டானது 3ஆவது அம்பயரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. 3ஆவது அம்பயரின் ரீப்ளேவில் டிக்னர் பந்தை பிடித்து அடித்தபோது, கருணரத்னே கிரீஸ்-க்கு வெளியே இருப்பது நன்றாகவே தெரிந்தது. அவர் கிரீஸ்-க்கு உள்ளே வருவதற்கு சிறிய இடைவெளியின் போதே ஸ்டம்பானது தகர்க்கப் பட்டுவிட்டது. ஆனால் ஸ்டம்பின் மேல் இருந்த ஷிங் பெய்ல்ஸ் ஆனது வெளிச்சம் தரவில்லை. அது 3ஆவது அம்பயரை குழப்பத்தில் ஆழ்த்தியது. பல முறை விக்கெட்டை பார்த்த பிறகு 3ஆவது அம்பயர் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்ட போதும் ஷிங்க் பெய்ல்ஸ்-இல் இருந்து வெளிச்சம் வராததால் நாட் அவுட் என அறிவித்தார்.
பெய்ல்ஸ் பேட்டரி செயலிழந்ததால் கொடுக்கப்பட்ட நாட் அவுட்!
3ஆவது அம்பயரின் முடிவை தெரிவிப்பதற்குள் அவுட் என்பதை உறுதி செய்த கருணரத்னே பெவிலியன் நோக்கியே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் மூன்றாவது அம்பயரின் நாட் அவுட் கால் நியூசிலாந்து அணியினரை மட்டுமல்லாமல், அவுட்டான கருணரத்னேவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 3ஆவது அம்பயரின் அந்த முடிவுக்கு பிறகு நியூசிலாந்து அணியினர் ஆன்-அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்படி இருந்தாலும் அவருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டு, அவர் மீண்டும் களத்தில் வந்து பேட்டிங்கை செய்தார். இந்த போட்டியை ஒளிப்பரப்பு செய்யும் அதிகாரப்பூர்வ ஸ்பார்க் ஸ்போர்ட் ஆனது ”ஷிங்க் பெய்ல்ஸ்-இன் பேட்டரி செயலிழந்துவிட்டதால் தான் நாட் அவுட் வழங்கப்பட்டதாக” தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய நாட் அவுட் ஆனது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/KbAD5uR
0 Comments